பாலைபரவல் செயற்பாடானது இன்று உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்ற முக்கிய சூழல்சார் பிரச்சனையாக காணப்படுகின்றது. இவ்வாறான பாலைபரவல் செயற்பாடு வெப்பத்தின் அதிகரிப்பு காரணமாக உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெப்பநிலையினை பொறுத்தவரை கடந்த 100 வருடங்களில் 0.5 பாகை செல்ஸியஸ் இனாலும் 20ம் நூற்றாண்டுகளில் 0.75 பாகை செல்ஸியஸ் இனாலும் அதிகரித்துள்ளது. 2100களில் 1.1-6.4 பாகை செல்ஸியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக பாலைபரவல் அதிகரிக்கின்றது. இந்த பாலைபரவலானது வறண்ட பகுதிகளில் அதிகளவில் இடம்பெறுகின்றது. இதில் 1/3 பகுதி பாலைவனங்கள் ஆகும்.
இன்று உலகில் சகாரா, கலகாரி, அரேபியா, கோபி, மஞ்சூரியா, அட்ட காமா , பற்றகோனியா, அரிசோனா, மேற்கு அவுஸ்ரேலியா என 60 நாடுகளின் எல்லைகளினை தொட்டவாறு பாலைவனத்தினுடைய பரப்பு விரிவடைந்து செல்கின்றது. ஆரம்பகாலத்தில் கோபி பாலைவனமானது வரட்சி காரணமாக டுன்ஹாங் நகரினை மண்ணினால் மூடி இன்று அந்த நகரமானது இல்லாமல் போயுள்ளது. அதுமட்டுமில்லாது சகாரா பாலைவனத்தின் தென் பகுதியில் உள்ள நைகர், சாட், சூடான், எத்தியோப்பியா ஆகிய நாடுகள் சகாராவின் பிடிக்குள் வருகின்றது. மற்றும் கலகாரி பாலைவனமும் இன்று விரிவடைந்துள்ளமை முக்கிய பிரச்சனையாக உள்ளது.
இந்த பாலைபரவலினை தூண்டும் காரணியாக காலநிலை மாற்றம் காணப்படுகின்றது. கைத்தொழில் செயற்பாடுகள் காரணமாக குளோரோ புளோரோ காபன் பாவனை அதிகரித்துள்ளது. இதனால் பச்சை வீட்டு வாயுக்களின் அளவினை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகி புறஊதா கதிர்களின் உட்பாய்ச்சல் காரணமாக பூகோள வெப்பமயமாதல் பிரச்சனை தோன்றுகின்றது. இதன் காரணமாக பாலைபரவுதல் செயற்பாடுகள் அதிகரிக்கின்றது.
பாலைபரவலினை தூண்டும் இன்னோர் காரணியாக பசும்போர்வைகளின் நீக்கம் காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் காணப்படும் காடுகளை மனிதர்கள் தமது தேவைகளின் நிமிர்த்தம் அழிக்கின்றனர். இதனால் பசும்போர்வைகள் இல்லாத ஒரு சூழல் உருவாகின்றது. இது காலப்போக்கில் பாலைபரவுதல் நிகழ்வினை தோற்றுவிக்கின்றது.
பாலைபரவுதலினை தூண்டும் இன்னோர் காரணியாக நாகராக்க செயற்பாடுகள் காணப்படுகின்றது. உலகின் அபிவிருத்தி எனும் போர்வையில் இன்று நகராக்க செயற்பாடுகள் துரிதகதியில் நடைபெறுகின்றது. இதற்காக தாவர பசும்போர்வைகள் அழிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதிகள் தரிசு நிலங்கள் ஆக்கப்பட்டு பிற்காலத்தில் பாலைபரவுதலினை உருவாக்கின்றது.
பாலைபரவுதலினை ஏற்படுத்தும் இன்னோர் காரணியாக முறையற்ற விவசாயம் காணப்படுகின்றது. அதாவது முறையற்ற வகையில் விவசாயத்தினை மேற்கொள்ளும் இடத்து எதிர்காலத்தில் பாலைபரவல் செயற்பாடு அதிகரிக்கின்றது. குறிப்பாக கிருமிநாசினி பயன்பாடுகள், ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் பயிர்செய்கை மேற்கொள்ளல், மண்ணரிப்பு போன்றனவற்றின் காரணமாக மண் தரமிழக்கின்றது. இதனால் தரிசு நிலங்கள் உருவாகின்றது. இது பாலைபரவலினை உருவாகின்றது.


No comments:
Post a Comment